ஈஸ்வரன் இந்த பிரபஞ்சத்தை படைத்தார் என்றால் அதற்கான பொருட்கள் எங்கு இருந்தது? எதிலிருந்து இவை அனைத்தையும் படைத்தார் என கேட்பதுண்டு.
ஈஷ்வர நிலை என்பது இறைநிலையின் முதல் நிலை. ஓர் சிலந்தியை கவனித்தீர்கள் என்றால், தானே தனது வலையை உருவாக்கி அதன் மையத்தில் அமர்ந்துவிடுகிறது. அது போல தன்னையே உலகாக்கி , அண்ட சராசரமாக்கி அதன் மையத்தில் ஈஸ்வர நிலை இருக்கிறது. சிலந்திக்கு தனது வலையை உருவாக்கும் பொருள் எங்கிருந்து கிடைத்தது? தன்னிலிருந்து எடுத்து தனக்காக உருவாக்கியதை போல, இறையாற்றல் தன்னிலிருந்தே அனைத்தையும் உருவாக்கியது. மீண்டும் ஒரு நாளில் அனைத்தையும் தன்னகத்தே எடுத்து ஒன்றாகி விடும். இதையே படைப்பு மற்றும் பிரலயம் என வழங்கப்படுகிறது.
இதை எப்படி உனக்கு தெரிந்தது? என கேட்கலாம். அந்த பிரம்மாண்டமான சிலந்தியின் ஓர் இழைதானே நானும்? அதற்குள்ளே இருந்து வந்ததால் என் மூலத்தை உணர்ந்தேன். அதனால் தெளிந்தேன். நீங்களும் முயற்சி செய்யுங்கள், நீங்கள் – நான் – அது என அனைத்தும் ஒன்று என உணர்வீர்கள்.
இறைவன் பிரபஞ்சத்தில் பூமியை படைத்து அதில் மட்டும் மனிதர்கள் வாழவைத்தான். ஏன் வேறு இடத்தில் உயிரினம் இல்லை.?
இது உங்கள் அறியமையை காட்டுகிறது. இந்த பிரபஞ்சத்தின் பிற பகுதியில் உயிரினங்கள் இல்லை என எதை வைத்து முடிவு செய்தீர்கள்? சூரிய மண்டலத்தை விட்டு இன்னும் மனித இனம் தாண்ட வில்லை. சில மத நூல்கள் , கடவுள் மனிதனை அழைத்து அவனுக்கு பூமியை உருவாக்கிருப்பதாக சொன்னார் என்கிறது. அப்பொழுது அதற்கு முன் மனிதன் எங்கே இருந்தான்? அடிப்படை நிலையில் இருப்பதாலும், அறியாமையாலும் இந்த கருத்து வெளிபட்டுள்ளது.
பஞ்சபூதங்கள் உயிர் உருவாக்கதிற்கு காரணம் எனும் பொழுது, பிரபஞ்சத்தில் எந்த புள்ளியில் ஐபூதங்களும் சந்திக்கிறதோ அங்கு உயிர் தோற்றம் நிகழும். அவர்களும் நம்மை போல் இருக்க வேண்டும் என்பது இல்லை. வேறு மாதிரியும் இருக்கலாம். எவ்வாறு வேறு மாதிரி என்கிறீர்களா? உங்களை போன்று அறியாமையில் இல்லாமல், நல்ல ஞானத்துடன் இருக்கலாம்.
நமது பிறப்பின் கர்மவினைக்கு முற்பிறவியின் செயல் காரணம் என்றால், இதை பின்னோக்கி பயணித்தோம் என்றால் முதன் முதலில் ஓர் பிறப்பு எடுத்திருப்போம் அல்லவா? அதற்கு எந்த கர்மவினை காரணம்?
நாம் யார் நாம் எங்கிருந்து வந்தோம் எனும் தேடல் இல்லாத காரணத்தால் இக்கேள்விக்கு பலருக்கு விடை தெரியவில்லை. இதற்கு முன் சொன்ன கேள்வி பதில் இதை தெளிவாக்கும் என்றாலும் வேறு கோணத்தில் இதை விளக்குகிறேன். யோக வாஷிஷ்டம் எனும் நூல் இதற்கான தகுந்த விளக்கத்தை தருகிறது. அதில் இருக்கும் ஓர் கதையை எளிய வடிவில் பதிலாக அளிக்க விரும்புகிறேன்.
சிவன் தியானத்தின் உச்சநிலையான சமாதி நிலையில் இருக்கிறார். தனது நிலை கலைந்து வெளியே வரும்பொழுது பரமாத்மா முன் ஓர் தேனீ ரீங்காரம் இடுகிறது. அதை கண்ட பரமாத்ம சொரூபம் தேனீயாக உருவெடுக்கிறது.
தேனீ பல இடங்களுக்கு சென்று தேனை சேகரிக்கிறது. அப்பொழுது அழகிய மலர் ஒன்றை பார்க்கிறது. தேனீ ஓர் மலராக மாற்றம் அடைகிறது. மலர் மணம் கமழ இருக்கும் சூழ்நிலையில் அதை பறித்து கோவிலுக்கு கொண்டு செல்கிறார்கள். அங்கே மலர் அர்ச்சனைக்காக கொண்டு செல்லப்பட்டு கருவறையில் இருக்கும் சிவலிங்கத்தின் மேல் அர்ச்சிக்கப்படுகிறது. மலர் தன்னிலை மீண்டும் உணர்ந்து சிவனாகிறது.
முதல் முதல் பிறவியில் நாம் இறைவனாகவே இருந்தோம். அந்த நிலை பிறப்பாலும் , நான் எனும் இருப்பாலும் மறக்கடிக்கபடுகிறது.
யோக வாஷிஷ்டம் என நான் குறிப்பிட்ட நூல் வஷிஷ்ட முனி ஸ்ரீராமருக்கு கூறிய ஞான கருத்துக்கள்.வஷிஷ்டர் ஸ்ரீராமனிடம் சொல்கிறார் ” நீ பரமாத்மா எனும் நிலை மறந்து இருக்கிறாயே அந்த தூக்கத்திலிருந்து வெளியே வா”. மாபெரும் இறைநிலையின் அவதாரத்திற்கே இந்த கதி எனில் நம் நிலையை எண்ணிபார்க்க வேண்டும்.
ஆணவத்துடன் நானே இறைவன் எனும் தன்மையை உணரும் பொழுது அரக்க குணம் ஏற்படுகிறது. பக்தியுடன் இதை உணரும் பொழுது அங்கே ஞானம் பிறக்கிறது.
நமது தர்மத்தில் இறைவனை தவிர அன்னியமாய் எதுவும் இல்லை. ஹிரண்ய கசிப்பு, கம்சன், ராவணன் என இறைவனுக்கு எதிராக செயல்படுவர்கள் எவரானாலும் அவர்களின் நிலை உணரவைக்கப்பட்டு இறுதியில் இறைவனுடன் இணைந்துவிடுவார்கள். காரணம் அவர்களும் இறைவனின் சொரூபமே.பிற மத கருத்துக்களை போல சாத்தான் என்ற எதிர் இயக்கம் கடவுளுக்கு அன்னியமாய் போர் செய்து கொண்டு இருக்க படைக்கப்படவில்லை.
தத்வமஸி, அஹம் பிரம்மாஸ்மி என்ற மஹாவாக்கியங்கள் உணர்த்தும் செய்தியும் இதுதான். நாமும் நம்மை கடந்து சென்றால் நமது சொரூபத்தை உணரலாம் அப்பொழுது நமது முற்பிறவி மட்டும் அல்ல முழுமுதற் பிறவியையும் உணர முடியும்.
Information Credit & Full Author Rights to: http://vediceye.blogspot.com/